kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏன் தேவன் தீமையை இவ்வுலகில் அனுமதித்திருக்கிறார்?


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:
ஏன் தேவன் தீமையை இவ்வுலகில் அனுமதித்திருக்கிறார்?


ஏன் தேவன் தீமையை இவ்வுலகில் அனுமதித்திருக்கிறார்?

கிறிஸ்துவுக்குள் மிகவும் அன்பான சகோதர சகோதரிகளே,

இவ்விதழில், ஏன் தேவன் தீமையை இவ்வுலகில் அனுமதித்திருக்கிறார்? பற்றிய உண்மை சத்தியத்தை குறித்து ஆராய்ச்சி செய்வோம்!. ஏன், தேவன் தீமையை அனுமதித்திருக்கிறார்?

அன்பின் சொரூபியான தேவன் ஏன் இவ்வுலகில் வலி, வேதனை, போர்கள், அழிவுகள், பஞ்சங்கள், அநீதி, கலவரங்கள், தீவிரவாதம், வேறு வேறு வகையான வியாதிகள், விபத்துக்கள், அகால மரணங்கள் இன்னும் பல. ஏன் தேவன் பார்த்துக் கொண்டு இன்னும் அமைதியாயிருக்கிறார்?

இயற்கை சீற்றங்கள், பூமி அதிர்ச்சிகள், வெள்ளம், சூறாவளி, புயல், பனிப்புயல், சுனாமி, எரிமலைகள், வெப்பம், குளிர் முதலியனவற்றை ஏன் அனுமதிக்கிறார்? அநேகர் இன்று தங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஓரு கட்டத்தில் பாதிக்கப்படும்போது, இக்கேள்வி அவர்கள் உள்ளத்தில் வருகிறது.

இன்னும் அநேகர் நாம் கடவுளை கேள்வி கேட்ககூடாது என்றும், ஊழியக்காரரை கேள்வி கேட்ககூடாது என்றும் கூறிவிடுவர். ஆனால், அநேக ஜனங்களுக்கு இக்கேள்விகளுக்கான சரியான பதில் கிடைக்காததால் கடவுளே இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர். சிலர் இக்கேள்விகளை மனதில் வைத்து அமுக்கி வைக்கின்றனர். சிலர் இதைப்பற்றி கவலைப்படாமல் மனம்போன போக்கில் தங்களுக்கு கடவுள்களை ஏற்படுத்திக்கொண்டு அவைகளை நம்பி வாழ்கின்றனர்.

மேலும், வேதத்தில் இதே கேள்வி, ஆபகூக் தீர்க்கதரிசி ஆபகூக் 1:2-4, 12 & 14 ல், 2300 வருடம் முன்பு அவர் எழுதும் போது, வசனம் 13 ல்,தீமையை பார்க்கமாட்டாத சுத்தக் கண்ணனே, அநியாயத்தை நோக்கிக் கொண்டிருக்கமாட்டீரே, பின்னே துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறது என்ன?

அதுமாத்திரமல்ல, வேதத்தில் பக்தனாகிய யோபு உத்தமனும் சன்மார்க்கனுமாயிருந்த போதிலும் தேவன் அவர்மேல் தீமையை அனுமதித்தார் என்று பார்க்கிறோம். யோபு 1 ஆம் அதிகாரம் முதல் 37 ஆம் அதிகாரம் வரை தீமையின் அனுபவமும் 38 ஆம் அதிகாரம் முதல் 42 ஆம் அதிகாரம் வரை ஆசீர்வாதக்காலம் குறிக்கிறது. அதாவது யோபு முழு மனுக்குலத்தையே குறிக்கிறார். ஆக, இதே கேள்வி ஏன் தேவன் தீமையை அனுமதித்தார்? அவருடைய உள்ளத்தில் இருந்ததை அநேக வசனங்களில் பார்க்கிறோம்.

யோபு 23:8,9 ல், இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை. பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன். வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஓளித்திருக்கிறார்.

என்று பார்க்கிறோம். இன்று அநேக ஜனங்களின் கேள்விகளும் அதேபோலத்தான் உள்ளது. ஆக, பாவியான ஜனங்களுக்கு இக்கேள்விகள் வரும்போது மகா பரிசுத்தமான தேவனுக்கு இதுபற்றி தெரியாமல் இருக்குமோ? யோசிக்க வேண்டும் அன்பானவர்களே !! இது பற்றி,

ஏசாயா 1:18 ல், வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 41:21 ல், உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார்.

எரேமியா 33:3 ல், என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்

இப்போது நாம் பாடத்திற்கு செல்வோமா.,!!!

பக்தனாகிய யோபுவின் மேல் தேவன் தீமையை வர அனுமதித்தபோது தன் எல்லா சொத்துகளும், குழந் தைகளும் அழிந்து போக்கும்போது கூட அதுபற்றி கவலைப்படாமல் கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார் என்று கூறினார். அவருடைய மூன்று நண்பர்கள் அவரிடம் யோபு ஏதாவது தவறு செய்திருப்பார். அதனால் அவருக்கு தீமை வந்ததாகக் கூறினார்கள். ஆனால், அவருக்கு அவர்களுடைய விளக்கம் மேல் திருப்தி இல்லாததால் தீமையின் அனுமதிக்கான காரணத்தை அறிய ஆர்வமாய் இருந்தார். அதிகாரம் 38 ல், தேவன் யோபுவுக்கு தன் பதிலை தர முன் வந்தார். எவ்வாறெனில்,

யோபு 38:1 ல், அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக:

என தனது பதிலை ஆரம்பிக்கிறார். பெருங்காற்று எனும்போது இவ்வுலகின் மேல் வரும் மகா உபத்திரவத்தின் காலத்தை அடையாலமாக அங்கு காண்பிக்கப்பட்டுள்ளது. யோபு 38:4 ல், நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.

யோபு 38:7 ல், அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் (தேவதூதர்கள்) எல்லாரும் கெம்பீரித்தார்களே

இங்கு, சொல்லப்பட்ட விடியற்காலத்து நட்சத்திரங்கள் யாரெனில்,

ஏசாயா 14:12 ல், அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியேRef. in KJV English

இங்கு சாத்தானைக் குறிக்கிறது.

வெளி 22:16 ல், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன்

இங்கு இயேசுவும் விடிவெள்ளி நட்சத்திரமாயிருக்கிறார். இது பற்றி பின்வரும் பாடங்களில் ஆராயலாம்.

இங்கு தேவன் முதலாவது பூமியின் சிருஷ்டிப்பு பற்றி ஏன் கூறுகிறார்? தேவனுடைய சிருஷ்டிப்பில் கோடானகோடி நட்சத்திரங்களும், கிரகங்களும், பால்வெளி மண்டலங்களும், சூரியன்களும் இருக்கும்போது பூமியின் சிருஷ்டிப்பு மாத்திரம் ஏன் விசேஷமானதாக கூறுகிறார்? என பார்க்கவேண்டும்.

ஏசாயா 66:1 ல், கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி,

இவ்வசனத்தை நன்றாக கவனிக்கவும்.

பாதப்படி என்ற வார்த்தையின் பொருளை அறிய வேண்டும். அக்காலங்களில் பாதப்படி என்பது குருபாதம் அல்லது ஆசான்களின் பாதத்தருகேகற்றுகொள்வர்.

அப்போஸ்தலர் 22:3 ல், அப்போஸ்தலர் பவுலும், கமாலியேனின் பாதத்தருகே வளர்ந்து என்கிறார். ஆக, பூமி எனக்கு பாதப்படிஎனும்போது முழு பூமியே கற்றுக்கொள்ளுகிற ஓரு இடம் என்று பார்க்கிறோம்.

ஆக, என்ன, யார் கற்றுக்கொள்ளக் கூடிய இடம்?

ஆதியாகமம் 1:27 ல், தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்

தேவன் போலவே மனிதனையும் தானாக யோசித்து செயல்படும்படி சுயாதீனமாக படைத்தார் (Freedom of Will or Moral Agency) மாறாக, மனிதன் எப்போதும் நன்மையே செய்யும்படி படைத்திருக்க முடியும்.ஆனால், தேவ சாயலைக் காணமுடியாது. மேலும் நன்மை, தீமை அறிந்து சுயாதீனம் பயன்படுத்தி தாமாகவே நன்மையைத் தேட வேண்டும் என்பதே தேவசித்தம். ஆக, தம்முடைய சிருஷ்டிப்பில் உயிருள்ள, அறிவுள்ள எல்லா சிருஷ்டிகளையும் (தூதர்கள் மற்றும் மனிதர்கள்) சுயாதீனம் உள்ளவராக சிருஷ்டித்தார் என்று பார்க்கிறோம்.

ஆனால், ஏதேனில் நடந்தது என்ன? இந்த சுயாதீனம் மிகவும் எளிதாக தவறாக பயன்படுத்தப்பட்டு மிக பெரிய இழப்புக்குள் வழிநடத்திவிட்டது.

ஆதியாகமம் 2:16,17 ல், தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

இங்கு நன்மை தீமை அறியத்தக்க கனி பற்றி அநேகர் அநேகவிதமான கருத்துக்களைத் தருகின்றனர். ஆனால் வேதத்தில் கனி என்று உள்ளதே தவிற வேறு எந்த விதமான அர்த்தமும் இருப்பதாக தெரிவதில்லை. ஏனெனில் தேவன் எவ்வித அனுபவமும் இல்லாத ஆதாமிடம் மிகப் பெரிய சோதனை செய்ய வாய்ப்பில்லை. எவ்வாறு ஓரு தகப்பன் தன் பிள்ளைகள் தனக்கு கீழ்படிந்திருக்க விரும்புவாரோ அதே போல தேவனும் ஆதாமிடம் எதிர்பார்த்தார்.

தீமை இவ்வுலகில் நுழைந்த விதம் எவ்வாறு? என்று பார்க்கும் போது தேவனுடைய சிருஷ்டிப்பில் இரு விடிவெள்ளி நட்சத்திரங்கள் (ஓருவர் இயேசு மற்றொருவர் லூசிபர் (சாத்தான்) பூரண அழகுள்ளவன்) மற்றும் கோடாகோடி தேவ தூதர்களை சிருஷ்டித்தார். பின் பூமியை சிருஷ்டித்து ஆதாம் ஏவாளையும், நன்முறையில் கவனித்துக்கொள்ள லூசிபர் என்ற மேன்மையான (பொறுப்பான) தூதனை (கேரூப்) ஏதேனில் வைத்தார்.

எசேக்கியேல் 28:13-15 ல், நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன், நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள்துவக்கி உன்னில் அநியாயம் கண்டு பிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.

ஆனால், இங்கு வந்த பின் இத்தூதனின் மனதில் தன்னை தேவன் மனிதனுக்கு கீழாக வைத்துவிட்டாரே என தவறாக எண்ணி பூமியையும் அதிலுள்ள யாவற்றையும் தன் வசப்படுத்திக் கொள்ள திட்டமிட்டு, மனிதனை வஞ்சனைபண்ணத் தீர்மானம் செய்தான்.

ஏசாயா 14:12 முதல் 15 வரை வாசித்தறியவும்.....

முதலில் ஆதாமிடம் வஞ்சனை செய்யாமல் ஸ்தீரியிடம் தன் வலையை விரிக்கிறான்.

ஆதியாகமம் 3:1 ல், அது (சர்ப்பமானது) ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ? என்றது.

ஓரு கேள்வியின் மூலம் முதன்முதலில் இவ்வுலகில் தீமை நுழைந்ததை கவனிக்கவும். இன்று அநேகர் பஸ், மற்றும் இரயில் பயணங்களில் நண்பர்களாக விரும்புகிறவர் முதலில் நேரம் எவ்வளவு? எங்கே போறீங்க? என ஆரம்பித்து அநேகர் அநேகம் பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வதை இன்னும் நாம் கண்கூடாக காண்கிறோம். கேள்வி குறி (?) நாம் பாம்பு வடிவத்தில் தானே போடுகிறோம் !!! கவனிக்க. இக்கேள்விக்கு ஏவாள் பதில் பேச ஆரம்பித்து இருவருமே வஞ்சனையில் விழுந்ததினால் பாவம் மரணம் முழு மனுக்குலத்தையே ஆட்கொண்டது.

ரோமர் 5:12 மற்றும் ரோமர் 6:23 ஆகிய வசனங்களை வாசித்தறியவும்.

ஆதியாகமம் 3:22 ல், பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஓருவரைப்போல் ஆனான்.

ஓரு முக்கியமான விஷயம் கவனிக்கவேண்டும். பின்பு தேவனாகிய கர்த்தர் இதோ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஓருவரைப் போல் ஆனான் எனும்போது ஆதாமை உண்டாக்கினபோது நன்மை தீமை அறியாதவனாகவே சிருஷ்டித்தார். ஆக, மனிதன் இவ்விரு விஷயத்தில் நன்கு தேறினவனாக வரும்போது அனுபவமிக்க மனிதனாகிறான்.

ஆனால் இந்த அறிவைப்பெற கண்டிப்பாக ஓரு காலம் தேவைப்படுகிறது. அநேகர் தங்களை ஞானிகளாக நினைத்துக் கொண்டு ஏன் தேவன் சாத்தானை அழித்திருக்கலாமே!!! அல்லது நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை ஏன் வைக்கவேண்டும்!! ஆதாம் அதை சாப்பிட முற்படும்போது தடுத்திருக்கலாமே!! என்றெல்லாம் கேட்கின்றனர்.

ஆனால் தேவனுடைய திட்டத்தில் எந்தவொரு காரியமும் அவருக்கு தெரியாமல் நடந்துவிடுமோ? எல்லாம் அவருக்கு தெரிந்துதான் நடக்கிறது.ஏசாயா 46:10, ஆபகூக் 2:2,3 மற்றும் அப்போஸ்தலர் 15:18 உலகத்தோற்றமுதல் தேவனுக்கு தன் கிரியைகள் எல்லாம் தெரிந்திருக்கிறது என வாசிக்கிறோம்.

சாத்தானை அழிக்க தேவன் முற்பட்டிருந்தாலும் அல்லது ஓரு ஆதாமை அழித்து வேறொருவரை உண்டாக்கியிருந்தாலும் ஆதாமிடத்தில் நடந்ததே அனைவரிடத்திலும் நடக்கும் என்பது பின்வரும் விளக்கங்கள் மூலம் அறியலாம். ஆக, தேவன் தன் எல்லா சிருஷ்டிகளையும் தொடர்ந்து அழிக்கும் சூழ்நிலையே ஏற்பட்டுவிடும் என பார்க்கிறோம். ஆகவே, தேவன் ஆதாம் பாவம் செய்யும்போது விட்டுவிட்டார். இன்று வரை ஜனங்கள் அவர்கள் வழியிலேயே எந்த குறுக்கீடும் இல்லாமல் விட்டுவிட்டார். ஆதாம் முதல் இந் த யுகம் முடியும் வரை தீமையின் அனுமதி காலமாக அல்லது தீமையைப்பற்றி நன்கு அறிந்துகொள்ளும் காலமாக தேவன் விட்டுவிட்டார்.

ஆக, இது பற்றிய அறிவு ஓருவர் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் எனும்போது 4 முறைகள் உள்ளன.

1தன்னில்தானே அறிந்து கொள்ளுதல் (Intuition)

எந்தவொரு அனுபவமோ, ஆலோசகர்களோ அல்லது மற்றவர்களைப் பார்த்தோ புரிந்து கொள்ளாமல் தன்னில் தானே இந்த அறிவை பெற்றிருத்தல். இது சர்வவல்ல பிதாவாகிய தேவனுக்கே இது பொருந்தும்.எவ்வாறெனில், இக்கனியை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் எனும்போது சாவைப்பற்றி தேவனுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. ஆனால் மனுஷனுக்கு மரணத்தை கண்களால் கண்டு புரிந்த பின்பு அதைப்பற்றிய அறிவு அவனுக்குள் வரும்.

மேலும் தேவன் விபச்சாரம், களவு, பொய்சாட்சி முதலியவற்றை செய்ய வேண்டாம் எனும்போது அதனுடைய விளைவுகள் முன்பு அவருக்கு தெரிந்திருக்கிறது. அதனாலேயே நியாயப்பிரமாணம் முன்கூட்டியே இஸ்ரவேல் ஜனங்களுக்கு அவர் தந்ததை நாம் அறிவோம்.

2. மற்றவர்களைப் பார்த்து புரிந்து கொள்ளுதல் (Observation)

இம்முறையானது மற்றவர்களுடைய அனுபவங்கள் அதன் விளைவுகளை நன்கு கூர்ந்து கவனிப்பதன் மூலம் அறிவைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகும். இதுவும் கூட மனிதனுக்குப் பொருந்தாது. ஆனால், இம்முறை தேவதூதர்களுக்கு மாத்திரமே பொருந்தும். பூமியில் மனிதர்களுடைய பாவம் அதன் விளைவுகள், பின் மரணம் அனைத்தும் அவர்களுக்கு நல்ல பாடமாக அமைகிறது.

1 பேதுரு 1:12 ல், இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.

1 கொரிந்தியர் 4:9 ல், நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.

அநேகர், தேவன் ஏன் மனிதருக்கு சோதனை வைத்தார்? ஏன் தூதருக்கு சோதனையில்லை என கேட்கின்றனர். தூதர் மனிதரிலும் சற்று பெரியவர்களாக, ஞானத்திலும், பலத்திலும் உள்ளதால் அவர்கள் பாவம் செய்தால் உலகம் தாங்காது என தேவன் அறிந்திருக்கிறார். முதல் உலகத்தின் பாவம் நமக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறதே, அதிலிருந்தே தூதர்கள் கண்டிப்பாக பாவம் செய்வர் என்பது நிரூபனமாகிவிட்டது. ஆகவே, தேவன் மனிதனுடைய அனுபவமே தூதர்களுக்கு போதுமானதாகிவிட்டது. அவர்களுக்கு, இப்பூமி கற்றுக்கொள்ளுகிற இடமாகிவிட்டது.

3. அறிவுரையின் மூலம்(Information)

இம்முறையானது அனுபவங்களுக்குள் செல்லாமல் செய்தி மற்றும் அறிவுரையின் மூலம் பெறப்படும் முறையாகும். இம்முறையே ஏதேனில் ஆதாமுக்குத் தரப்பட்டது. ஆனால், இம்முறை அவருக்கு பலன் தரவில்லை எனப்பார்க்கிறோம். இப்போதும் கூட இம்முறை முழு அளவில் பலன் தருவதில்லை.

4. அனுபவம் மூலம் (By Experience)

அனுபவமே ஓரு மனிதனின் மிகச்சிறந்த ஆசானாகும். ஓவ்வொரு மனிதனும் தனித்தனியாக சில அனுபவங்கள் மூலம் அறிவை பெற்றுக் கொள்ளும் முறையே இது. இதுதான் மிகவும் பொருத்தமான முறையாகும். பாவம் அதன் விளைவுகள் அதைத் தொடர்ந்து மரணம், பாவத்தின் பலவித வகைகளான போட்டி, பொறாமை, வஞ்சனை, கோபம், வெறுப்பு, பொய், விபசாரம், கொலை, களவு, இச்சை, பசி, பட்டினி, வியாதி, சமத்துவமின்மை, மரணம் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். இவைப்பற்றிய விளைவுகளை மனிதன் நன்கு அறிந்து கொள்ள வேண்டுமானால் இப்பேற்பட்ட சில கடினமான கசப்பான அனுபவங்கள் மூலம் செல்ல வேண்டும். எவ்வாறு ஓரு சிறு குழந்தை நெருப்பின் மேல் ஆர்வமடையும் போது பெற்றொரே அதன் நன்மைக்காக, கையைப்பிடித்து லேசாக சூடுபட வைத்தவுடன் அக்குழந்தை மீண்டும் நெருப்பிடம் செல்வதில்லை. அதேபோல முதலில் ஆதாமிற்கு மரணம் என்றால் என்னவென்று தெரியவில்லை. தன் மகன் ஆபேல் இறந்த போது இதுதான் மரணமா? எனப் புரிவதற்குள் எத்தனை முறை அவரை எழுப்பினாரோ? முகத்தில் எத்தனை முறை தண்ணீர் அடித்தாரோ? நமக்குத் தெரியாது!!

ஆனால், ஆபேலின் உடலில் கெட்ட வாசனை வந்த போது, இனி எழுந்திருக்க மாட்டான் என உறுதியாகும் போது தேவன் சொன்ன வார்த்தை நீ மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்என்பது அவருடைய மனதில் வந்து தேவனுடைய வார்த்தையை மீறியதால் வந்த விளைவை எண்ணி எந்த அளவு வேதனை அடைந்திருப்பார்? எத்தனை நாட்கள் அழுதிருப்பார் யோசிக்கவேண்டும் அன்பானவர்களே!! இப்போது கூட உலகில் எல்லா மனிதரும் சில பாவங்கள் செய்து அதன் விளைவுகளை அனுபவிக்கும்போது அந்த தவறை மீண்டும் செய்யாத வகையில் தங்களை திருத்திக்கொள்ள வைக்கும் மகத்தான ஓரு ஆசானாயிருக்கிறதல்லவா!! உதாரணமாக நம் பையிலிருந்து பணப்பையை ஓருவன் திருடிவிட்டால் நம் மனது படும்வேதனை தான் எத்தனை, எத்தனை., அந்த அனுபவம் வாங்கும் போது மற்றவர்களின் பணத்தை நாம் எடுப்பதற்கு நம் மனது ஓத்துழைக்கிறதில்லை. அதே போல் நம் மீது யாராவது ஓருவர் தவறாக பேசியிருந்தால், அது நமக்கு தெரியவரும் போது நம் மனது எவ்வளவு கஷ்டப்படுகிறது. அப்பொழுது நாம் மற்றவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள உதவுகிறது.

இன்று உலகமே சுயநலமாக இல்லாமல் எல்லோரும் ஓரே மாதிரி நல் யோசனை செய்திருந்தால் எவ்வாறு இருக்கும்? என யோசித்தால் நமக்கு சந்தோஷத்தை தருகிறது. ஆனால், தேவனே இதை அனுமதிக்கிறார் என்றால் மனிதர் பல வகையில் தீமையின் அனுபவம் வாங்கும்போது அந்த அனுபவங்களைப் பயன்படுத்தி 1000 வருட கிறிஸ்துவின் அரசாட்சியில் நன்மையையே தேடுவர். அதுமாத்திரமல்ல இக்காலத்தின் எல்லா தீமை அனுபவங்களுக்காக தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் எப்போதும் நன்றி உள்ளவர்களாவார்கள்.

எபிரேயர் 12:11 ல், எந்த சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும், பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.

ஆக, தேவனுடைய சிட்சை பெரிய அளவில் இருக்கும் என பார்க்கிறோம். பாவி மனுஷரான நாமே நம் பிள்ளைகளை நல்வழிப்படுத்த சிட்சிக்கும்போது நமது நன்மைக்காகவே தேவன் கடந்த 6000 வருட காலமாக இவ்வுலகில் தீமையை அனுமதித்திருக்கிறார்.

பிரசங்கி 1:13 ல், மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்குத் தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்

ரோமர் 8:22 ல், ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.என வாசிக்கிறோம்.

ரோமர் 8:20,21 ல், அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுயஇஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.என வாசிக்கிறோம்.

ஆக, இத்தீமையின் அனுபவம் அனுமதிக்கப்பட்டுள்ளபோதே ஜனங்களுக்கு நம்பிக்கையையும் தேவன் வைத்திருக்கிறார்.

எவ்வாறெனில், ஏதேனில் ஆதாம் பாவம் செய்த போது தாங்கள் நிர்வாணிகள் என அறிந்து தங்களுக்கு அத்தி இலைகளை உடையாக்கினார்கள். ஆனால் ஓரிரு நாட்களிலேயே அவ்விலைகள் காய்ந்து விழுந்திருக்கும்.

ஆதியாகமம் 3:21 ல், தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.(Leather Garments)

இங்கு ஓன்றை நாம் நன்றாக கவனிக்கவேண்டும். யாதெனில், தோல் உடைகள் வேண்டுமெனில் அங்கே ஓரு மிருகம் கண்டிப்பாக பலியாகியிருக்கவேண்டும். தேவன் தமது திட்டத்தில் முன் கூட்டியே ஆதாமின் மீறுதலை உணர்ந் திருந்ததால் உடனடியாக அவருடைய மீட்பின் திட்டத்தை தமது நேச குமாரன் இயேசுவின் ஈடு பலியினுள் மறைத்து வைத்திருக்கிறார். இதையே தேவன் அடையாளமாக அவர்களுக்கு தோல் உடைகளைத் தந்தார் என்று பார்க்கிறோம். இயேசுவின் ஈடு பலியே ஜனங்களுக்கு முக்கியமாக நம்பிக்கை தருவதாக உள்ளது. மாற்கு 10:45, 1 கொரிந்தியர் 15:21,22 ஆகிய வசனப்பகுதிகளை வாசித்தறியவும்.

அநேகர் அந் த பழத்தை சாப்பிட்டதில் தான் தாங்கள் உடலை மூடவேண்டும் என நினைத்ததாக எண்ணுகின்றனர். ஆனால், பொதுவாக மனிதன் ஏதாவது குற்றம் செய்து கண்டுபிடிக்கப்பட்டால் தன்னை மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. இக்காலத்தில் அநேக குற்றவாளிகள் பிடிபடும்போது உடனே தங்கள் முகத்தை மூடிக்கொள்கிறார்களே!!!!!!! ஏன்? அன்று ஆதாமும் ஏவாளும் தேவனுக்கு முன்பாக தங்களை மறைத்துக் கொண்டனர்.

ஆக, கிறிஸ்துவின் ஈடுபலியின் மூலம் 1000 வருட அரசாட்சியில் எல்லா ஜனங்களும் மீண்டும் உயிர்பெறும் போது இவ்வுலகில் பெற்ற தீமையான அனுபவங்களின் மூலம் நன்மை, அதாவது எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் தேவன் சித்தமுள்ளவராய் இருக்கிறார் எனும்போது உண்மை தேவனுக்கு கீழ்படிந்து நடக்க மனிதர்கள் தங்களை உடனடியாக தத்தம் செய்வார்கள்.

ஆக, உலகின் ஜனங்கள் அதாவது பூமியில் எத்தனை கோடி பேர் என தேவன் நிர்ணயித்திருக்கும் எண்ணிக்கை வரும் போது பூமியில் தீமையின் அனுபவம் மாறி, ஏசாயா 60:13 ல், உன் பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன்

ஏசாயா 13:12 ல், புருஷனைப் பசும்பொன்னிலும், மனுஷனை ஒப்பீரின் தங்கத்திலும் அபூருவமாக்குவேன்என தேவன் உரைக்கிறார்.

ஆக, தேவனுடைய பாதப்படியாகிற பூமியில் ஜனங்கள் அனைவரும் பாவம், மரணம் முதலிய தீமையான அனுபவங்களைக் கற்றுக்கொண்ட பின்பு தேவன் இப்பூமியை சீர்படுத்துவார். இத்தீமையின் அனுபவம் ஆயிரவருட ஆட்சியில் பிரமிக்கத்தக்க அருமையான பலன்களை ஏற்படுத்தும்.

ஏசாயா 65:17 ல், இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன், முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.என வாசிக்கிறோம்.

யோபு 1 ஆம் அதிகாரம் முதல் 37 ஆம் அதிகாரம் வரை 6000 வருட தீமைக் காலம். இது இரவு என்றழைக்கப்படுகிறது (சங்கீதம் 30:5 - Read in English Bible) 38 ஆம் அதிகாரம் முதல் 42 ஆம் அதிகாரம் வரை ஆயிரவருட அரசாட்சியில் தேவனுடைய சத்தியம் ஜனங்களுக்கு வெளிப்படுத்தப்படும் காலம். அதன் முடிவில் ஜனங்கள் இரட்டிப்பாக ஆசீர்வாதம் பெறும் காலமாக, அதாவது நன்மை தீமை அனுபவம் பெற்று அனுபவமிக்க சந்ததியாக இதே பூமியில் நித்திய ஜீவனோடு வாழ்வார்கள்.

ஆக, தூதரும் இப்பூமியில் மனிதருடைய அனுபவங்களைப் பார்த்து கற்றுக் கொள்ளக்கூடிய இடமாக இருப்பதோடு, தன் ஓரே பேரான குமாரன் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையே தேவன் இத்தீமை உலகில் சாதகமில்லாத சூழ்நிலையில் இப்பூமியில் தானே சோதனை செய்தார். ஆக, இயேசு கிறிஸ்துவும் கற்றுக் கொள்ளக் கூடிய இடமாக இப்பூமி இருந்தது.

எபிரேயர் 5:8,9 ல், அவர் குமாரனாயிருந்தும் பட்டப்பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு....... என வாசிக்கிறோம்.

ஏசாயா 53:10 ல், கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி...என வாசிக்கிறோம்.

மேலும் இவ்வுலகில் கிறிஸ்துவைப் போலவே அவரை உண்மையாய் பின்பற்றி நடக்கின்ற அவருடைய பரிசுத்தவான்களும் திவ்விய சுபாவத்தை அடைய, 2 பேதுரு 1:4 ம் வசனப்படி, இப்பூமியே அவர்களுக்கு கற்றுக்கொள்ளக் கூடிய ஓரு இடமாக உள்ளது. இவர்களை தேவன் பூமியில் எத்திசையிலும் எல்லா ஜாதி ஜனங்களிலிருந்தும் தெரிந்திருக்கிறார். வெளி 5:9. இவர்களே கிறிஸ்துவின் சபை, சரீரம், மணவாட்டி ஆவர்.

ஏசாயா 55:8,9 ஆகிய வசனங்களின் படி, ஆக நம்முடைய யோசனைகளும் தேவனுடைய யோசனைகளும் ஓன்றல்ல என்பது தேவன் இவ்வுலகில் தீமையை அனுமதித்ததின் நோக்கத்திலிருந்து புரிகிறது. இராஜ்யத்தில் அனைத்து ஜனங்களையும் உயிரடையச் செய்யும் போது, பாவத்திற்கும், நன்மை, கீழ்படிதல், பரிசுத்தமான எண்ணங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஜனங்கள் உணரும்போது,

வெளி 5:13 ல், எல்லா சிருஷ்டிகளும் தேவனுக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும், கனமும், மகிமையும், வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.என்று மகிமை செலுத்துவார்கள்.

மல்கியா 2:15 ல், அவர் ஓருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பூரணமாயிருந்ததேகீழ்படிதலுள்ள சந்ததியை பெறும்படி தானே!!ஆக, ஆதாம் என்ற தனி மனிதன் தேவன் எதிர்பார்த்த சந்ததியல்ல, மாறாக நன்மை தீமை நன்கு அறிந்த கீழ்படிதலுள்ள சந்ததியே! இவர்கள் 1000 வருட ஆட்சியின் முடிவிலேயே கிடைப்பர்.

வெளி 21:4 ல், அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஓழிந்துபோயின என்று விளம்பினது.

தேவன் தாமே அவர் சத்தத்தைக் கேட்கவும், அவர் சத்தியத்திற்கு கீழ்படியவும் உங்களுக்கு உதவி செய்வாராக!!!

தேவனுடைய கிருபை நம் அனைவரோடும் இருப்பதாக, ஆமென்.



__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard