வேதத்தின் மிகவும் அடிப்படையான சத்தியம் உயிர்த்தெழுதல். இந்த மாபெரும் மகிழ்ச்சிகரமான நிகழ்வை சாத்தான் ஒரு மிகவும் மோசமான, ஒரு பயங்கரமான நிகழ்வாகக் காண்பித்து அறைகுறை 'கிறிஸ்தவர்களை' கலக்கிக்கொண்டிருக்கிறான். இவர்களும் அதை நம்பி மோசம்போய்க்கொண்டிருக்கிறார்கள்.
உயிர்த்தெழுதல் எதற்காகவென்று சற்றே சிந்தித்தால் புரியும். மனிதன் பாவி என்று அநேக வசனங்கள் கூறுகின்றன. எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள்... எல்லாரும் என்றால் ஆதாமில் தொடங்கி பிறக்கப்போகும் கடைசி மனிதன் வரை என்றுதான் அர்த்தம். "பாவத்தின் சம்பளம் மரணம்" எனவே எல்லாரும் மரிக்கிறார்கள். மரிப்பது என்றாலே மறுபடியும் உயிர்பெற சற்றேனும் வாய்ப்பில்லாத ஒரு நிலையே. எனவே எல்லாரும் அந்த தண்டனை (நித்திய ஆக்கினை)க்கு தகுதியாகிறார்கள். கதை இப்படியே முடிந்திருந்தால் அழிந்துபோகத்தான் தேவன் மனிதர்களைப் படைத்தார் என்று எண்ணி அத்தியாயத்தை முடித்துவிடலாம்.
ஆனால் தேவனது திட்டம் மனிதன் பலுகிப் பெருகி பூமியை நிரப்பவேண்டும்; நித்தியமாய் மகிழ்ச்சியாய் பூமியில் வாழவேண்டும் என்பதுதான்! ஆகவேதான் தன்னுடைய ஒரே பேறானவரை எல்லாருடைய பாவத்துக்கும் ஈடுபலியாக, கிரயமாக செலுத்தி தன்னுடைய நீதியையும் நிறைவேற்றி தன்னுடைய அன்பையும் தேவன் இவ்வண்ணமாக வெளிப்படுத்தினார்.
எனவேதான் மரித்தவர்கள் அனைவருமே மீண்டும் உயிரடைந்து பாவத்தின் வாசனையே இல்லாத, அன்பே வியாபித்திருக்கும் ஒரு உன்னதமான கிறிஸ்துவின் ஆட்சியில் ஜீவனை அடைந்து தேவனையும், கிறிஸ்துவையும் முழுமையாக அறிந்துகொண்டு ஆதாமின் ஆதி நிலைக்குத் திரும்புவர். சோதிக்கிறவன் அங்கு இல்லாதபடியால் சோதனையே இருக்காது.
அதைவிடுத்து,
மனிதர்கள் பாவஞ்செய்து மரிப்பார்களாம், 1000 வருட ஆட்சியில் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்களாம், நியாயத்தீர்ப்பு நடக்குமாம், அதில் "அற்ப மானிடனே! சாத்தானின் ஆளுகையில் நான் வைத்திருந்த பழைய பூமியில் நீ ஏன் பாவம் செய்தாய்?" என்று கேட்டு, "மீண்டுமாக செத்துப்போ, இனி உனக்கு இன்னொரு உயிர்த்தெழுதல் இல்லை!!!!" என்று கிறிஸ்து இன்னொரு மரண தண்டனை கொடுத்துவிடுவார். என்று நம்புவது எத்தகைய அபத்தம்?
மேலும் இவர்கள் போதிப்பது,
பசியாயிருக்கும் யாருக்காவது ஒருவேளை சாப்பாடோ,
அல்லது வஸ்திரமே இல்லாமல் அம்மணமாக இருப்பவருக்குஒரே ஒரு சட்டையோ,
ஒரெ ஒரு ஜெயில் விஸிட்டோ,
மருத்துவமனையில் உள்ள யாராவது ஒருவியாதியஸ்தரைப் பார்த்து விசாரித்துவிட்டு வந்தாலோ
போதும். இதைச் செய்தால் நீங்கள் ஒரு மாபெரும் நீதிமானாகிவிடலாம். இதை வாழ்வில் ஒருமுறைகூட செய்யாதவர்கள் ஒரு மகாபயங்கரமான அநீதிமான்களாகி நித்திய ஆக்கினையை அடைவார்கள். ஆகையால் வாழ்க்கையில் ஒரு முறையாவது இதில் ஏதாவது ஒன்றைச் செய்து எல்லாரும் இன்ஸ்டன்ட் நீதிமான்களாக மாறி நித்தியஜீவனை சுந்ததரித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
என்று போதிப்பவர்களைக் குறித்து என்னதான் எண்ணுவது.......?
இவ்வண்ணமாகப் போதிப்பவர்களது ஆற்றாமை இவர்களது குரூரமான கேள்விகளிலிருந்து தெரிகிறது. இவர்கள் கேட்கும் பிரதான கேள்வி, "அப்படியென்றால் யார் எப்படி வேண்டுமானாலும் ஜீவிக்கலாமா?"
என்னவோ இவர்கள் தங்கள் சொல், செயல், சிந்தனைகளில் மஹா தூய்மையாக இருப்பது போல காண்பித்துக்கொண்டு தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அதற்காக பாவம் பெருகும் இடத்தில் கிருபை பெருகுமாதலால் எல்லாரும் அதிகம் பாவம் செய்யுங்கள் என்று அர்த்தமல்ல. அத்தகைய கிருபையின் மேன்மையை உணர்ந்தால் நம்மில் அன்பு பெருகும், மன்னிக்கும் தன்மை மேலிடும், மற்றவர்களை பட்சபாதமின்றி நேசிக்க விழைவோம்.... அதைவிடுத்து மனிதனால் முடியவே முடியாத, மற்ற மதங்கள் போதிப்பதுபோல கிரியைகளின் மூலம் "முக்தி" அடையும் முயற்சிகளில இறங்க மாட்டோம்.
உயிர்தெழுதலின் மேன்மையை உணர்வோம், தேவனுடைய அன்பின் ராஜ்ஜியத்தை விசுவாசத்தோடு எதிர்நோக்குவோம், அவர் சித்தம் பூரணமாக நடைந்தேறும் என்ற நிச்சயித்து இந்த பொல்லாத பிரபஞ்சத்திலும் தேவசித்தத்துக்கு இசைவாகத்தான் காரியங்கள் நடக்கிறது என்று அறிந்துகொள்வோம்.