பாவத்தின் தொடக்கம் என்ற இந்த கட்டுரை சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கக்கூடும், ஆழமான சத்தியங்கள் அப்படிப்பட்டவையே....
ஆதாமும் ஏவாளும் தேவ கட்டளைக்கு கீழ்ப்படியாமல் விலக்கப்பட்ட கனியைப் புசித்து பாவம் செய்தது தேவனுடைய உள்நோக்கமல்ல என்று பிரசித்தி பெற்ற பிரசங்கிமார்களாலும், "கிறிஸ்தவத்"தாலும் நம்பப்படுகிறது. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள். ஆதாம் பாவம் செய்வது தேவ விருப்பமல்ல, ஆதாம் பாவம் செய்திருக்க வேண்டியதில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஆதாம் மட்டும் 'பாவம்' செய்திருக்காவிட்டால் நாம் அனைவருமே ஏதேன் தோட்டம் என்ற மாபெரும் தோட்டத்தில் இன்று வாழ்ந்துகொண்டிருப்போம். பரிபூரண ஆரோக்கியத்தோடு, கவலையின்றி, 24 மணிநேரமும் மகிழ்ச்சியாக, சாகவே சாகாமல் சந்தோஷமாக இருந்திருப்போம், தேவனும் சந்தோஷமாக இருந்திருப்பார்.
கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். ஒரு விஞ்ஞானி ஒரு இயந்திரத்தை உருவாக்கி அது 'சரிவர' செயல்படாமல் போனால் அதற்குக் காரணம் அவரா? ஆம்! இயந்திரமோ அல்லது அந்த சோதனையோ வெற்றிபெறாமல் போனால் அந்த இயந்திரத்தையோ அல்லது அந்த சோதனையையோ காரணமாக சொல்லமுடியுமா? இல்லை. அதற்காக தேவனை அதற்குக் காரணமாகச் சொல்லமுடியுமா? இல்லையல்லவா? மிகச்சரி.
இப்போது கிறிஸ்தவர்கள் கூற்றுப்படி, தேவன் ஒரு வெற்றிபெறாத சோதனையையோ அல்லது 'கெட்டுப்போகும்' ஒரு இயந்திரத்தையோ செய்தால் அதற்குக்காரணம் அவரா?இல்லை. அவர் அந்த சோதனையையோ, அந்த இயந்திரத்தையோ காரணமாக்குகிறாரா? ஆம்! அவர் மனிதன் மீது பழிபோடுகிறாரா? ஆம். என்னே ஞானம்?
உலகத்தின் ஞானத்தை தேவன் ஏன் பைத்தியம் என்கிறார் என்பதற்கு மேற்கண்ட விஷயம் ஒரு நல்ல உதாரணம்.
"இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது..." 1கொரி3:19.
முதலாவது இன்றைய கிறிஸ்தவம் தேவனுடைய படைப்பான மனிதன் கெட்டுவிட்டான் என்று யூகிக்கிறது . - கிடையவே கிடையாது!
இரண்டாவதாக, இதற்குக் காரணம் தேவன் கிடையாது அதற்கு அவர் பொறுப்பாளி அல்ல என்று நம்புகிறார்கள். - அவரே பொறுப்பு!
வேதத்துக்குப் புறம்பான இரண்டு வெவ்வேறு 'ஊகங்கள்' வேத சத்தியத்துக்கு நிகராகாது!
வெகு சிலரே ஒருவேளை இந்த உலகம் இப்படி ஒரு மோசமான சூழலில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை, காலா காலத்துக்கும் அல்ல, (ஒரு உன்னத நோக்கத்துக்காக) இருக்கவேண்டும் என்பது தேவனுடைய சித்தமாக இருக்கலாம் என சிந்திக்கின்றனர். இப்படி ஒரு தீமையும், துன்பமும் நிறைந்த ஒரு உலகத்தை தேவனே அனுமதித்திருக்கிறார் என்பது ஒரு கிறிஸ்தவனுக்கு ஜீரணிக்கமுடியாத விஷயமாகும். ஆனால் இதற்கு மாற்றுக்காரியத்தைப் பாருங்கள். தேவன் ஒரு நல்ல படைப்பை உருவாக்கத்தான் முயன்றார்(தோல்வி முயற்சி?) ஆனால் இப்படியாகும் என்று எதிர்பார்க்கவில்லை? ஆகையால் அதுமுதல்அதைச் சரி செய்ய அவருக்கு மனிதர் பேரில் அன்பில்லை அல்லது அதற்கான வல்லமையோ திறமையோ அவருக்கு இல்லை. இரண்டு கூற்றுகளுமே தேவனுடைய சர்வவல்லமையை நிராகரித்து, இதை நிறுத்த முடியாத ஒரு 'இயலாத' ஒரு தேவனைத் தான் காண்பிக்கும். இவ்வுலகத்தை பாவத்திலிருந்தும் தீமையிலிருந்தும் விலக்க பெரும்பாலான மனிதர்களை அக்கினியில் வாதிப்பதுதான் தேவனுடைய தீர்வு என்றுதான் நம்மை நம்பவைக்கப்பார்ப்பார்கள்.
இது முழுக்க முழுக்க தேவ தூஷணமாகும். அறிவு குறைந்த மனிதன் தன்னுடைய கண்டுபிடிப்பு கெட்டுப்போகக் காரணம் தானே என்று பொறுபேற்க முடியுமனால் தேவன் அதைக்காட்டிலும் பெரியவிதத்தில் இன்னும் அதிக பொறுப்பாளியாவார். அவருடைய எல்லா படைப்புகளுக்கும் அவரே பொறுப்பாளி மற்றும் அவருடைய படைப்புகள் எதுவுமே சோரம்போகவில்லை. இதோ சாட்சி.
தேவனால் படைக்கப்பட்ட உலகம் ஆதாம் பாவம் செய்வதற்கு முன்பு எப்படி இருந்திருக்கும் என்று ஒரு ஆயிரம் கிறிஸ்தவர்களை கட்டுரை எழுதச்ச்கொன்னால், நம்பமுடியாத அழகும், இசைவும், மனிதன் மிருகங்கள் உட்பட எல்லாம் எப்படி பரிபூரணமாக இருந்தன என்று ஆயிரம் கட்டுரைகள் கிடைத்திருக்கும். ஆனால் இந்தக் கட்டுரைகள் வேதத்தின் படி சரியானவையாக இருக்குமா? பார்ப்போம்...
"அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையோடே, அந்த சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே, மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த்தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது. ரோமர்8:20, 21,22.
இந்த வசனம் வேதத்தில்தான் உள்ளது என்பது தெரியுமா? இந்த வசனத்தை எப்போதாவது ஆழமாக தியானித்தோமா? கிறிஸ்தவ (துர்)உபதேசத்துக்கு சரியான அடி கொடுக்க(ஆப்பு வைக்க?) இந்த வசனங்கள் போதும். ஸ்ட்ராங் கிரேக்க அகராதியில் இந்த வசனத்திலுள்ள வார்த்தைகளுக்கு அர்த்தம் காண்போம்:
ஆனால் இந்த போலி கிறிஸ்தவம் சாத்தானை தேவனுக்கு நிகராக உயர்த்துகிறது. ஏதோ தேவனுக்கும் சாத்தானுக்கும் ஒரு பெரிய்ய்ய்ய்ய போராட்டம் நடப்பதுபோலவும், அதில் இந்த அற்ப மனிதர்கள் தேவனுக்கு உதவியாக அவரைத் தோல்வியிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் முனைப்புடன் இருப்பதாகவும் ஒரு மாயையில் இருக்கிறது.
ஏற்கனவே வெற்றிபெற்றுவிட்ட திட்டத்தை, முழு மனுக்குலமும் தன்னுடைய ஒரே பேறான குமாரன் மூலமாய் மரணம் என்னும் நித்திய அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது என்ற மாபெரும் நற்செய்தியை அறியாமல், இப்போது இவர்கள் வாழும் காலக்கட்டத்தில் இவர்கள் அறிவுகெட்டிய காரியங்களை மட்டும்வைத்து அற்ப அறிவினால் ஏதோ இந்த உலகமே கெட்டுப்போய் பெரும்பாலானவர்கள் (அல்லது எல்லோருமே) நரகம் என்ற கற்பனையான இடத்துக்குத் தகுதியாகி சாத்தானின் திட்டம் பூரணமாக நிறைவேறுவதாக எண்ணிக்கொண்டிருப்பது எத்தனை பரிதாபம்...
உலகில் நடக்கும் எல்லா சம்பவங்களுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகள் என்பது சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கும்.
"எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர் தமக்கு யாதொன்று தேவையானது போல மனுஷர் கைகளால் பணிவிடை கொள்ளுகிறதுமில்லை. மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமிமீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்"அப்17:25,26
இதற்கென்ன அர்த்தம்?
ஆனால் இந்த அற்ப மனிதர்கள்தான் தன்னுடைய தயவு, உதவியில்லாமல் தேவனால் கிரியை செய்யமுடியாதென்று தங்களை தேவனுக்கு மேலாக உயர்த்துகிறார்கள். ஏனென்றால் இவன் போய் 'சுவிசேஷம்' அறிவிக்காவிட்டால் அந்த நபர் நரகத்துக்குத் தகுதியாவான். ஆக ஒருவர் பரலோகத்துக்கோ, நரகத்துக்கோ போவது இவன் எடுக்கும் முடிவில் உள்ளதேயன்றி தேவன் கையில் இல்லை...
என்ன ஒரு முட்டாள்தனமான எண்ணம்
ஆக தேவனால் சகலமும் முன்குறிக்கப்பட்டதுதான், உலகில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் முழு பொறுப்பாளி தேவனே, அப்படியில்லாதபட்சம், தேவனுடைய திட்டத்தில் இல்லாத நிகழ்வுகளும் நடக்கின்றது என்றபட்சம் தேவன் சம்பவங்களை வேடிக்கைபார்க்கும் ஒரு வெளிப்பார்வையாளனாகிவிடுவார். செய்வதறியாது திகைத்து, ஒவ்வொரு சம்பவங்களுக்கும் செயல்களுக்கும் அவர் அந்நியராக இருந்து மனிதர்களை நம்பியிருக்கும் ஒரு கையாலாகாதவராகிவிடுவார்.
ஆனால் மேலெ குறிப்பிட்ட வசனங்கள் மாத்திரமல்ல சகலமும் தேவ சித்தம் என்பதை விளக்க அநேக வசனங்கள் உண்டு...
முன் தீர்மானிக்கப்பட்ட காலம் என்றால் இந்த காலகட்டத்தில்தான் இவன் பிறக்கவேண்டும் என்பதே. ஆக இந்த காலகட்டத்தில் இந்த இந்தியாவில், நாம் பிறக்கவேண்டும் என்பது தேவனால் முன்குறிக்கப்பட்ட விஷயம் என்பது பலருக்கு ஆச்சரியமளிக்கலாம். அதுதான் உண்மை. ஆக ஒரு நபர் பிறக்கவேண்டுமென்றால் அவரது தாய் தந்தை திருமணம் செய்தாகவேண்டும், அவர்களது முப்பாட்டனார் முத்தலைமுறையில் யாரேனும் சிறுவயதில் விபத்திலோ அல்லது வியாதியிலோ இறந்திருக்க நேரிட்டால் இவர் பிறக்கும் வாய்ப்பே இல்லாது போய்விடும்.... அல்லது அந்த சந்ததியில் ஒரு முப்பாட்டனாருக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றால் இவர் பிறக்க முடியாது....
எனவே "அவனன்றி ஓர் அணுவும் அசையாது" என்ற கூற்று சத்தியம்.
ஆனால் இதைப்புரிந்துகொள்ளாமல் அப்ப நாம் எப்படி வேண்டுமென்றாலும் ஜீவித்துவிட்டு தேவன்மேல் பழியைப்போடலாமே என்று ஆதங்கப்படுபவர்களுக்கு, நீ அப்படித்தான் இருக்கவேண்டும் என்று தேவன் நினைத்தால் அப்படித்தான் இருப்பாய். தாவீது உசியாவைக்கொன்று அவன் மனைவிமூலமாய் சாலொமோனும் அந்த சந்ததியில் கிறிஸ்துவும் பிறக்கவேண்டும் என்பது தேவ ஏற்பாடாக இருக்கும்பட்சம் தாவீது ஹெல்ப்லெஸ்.....
இதைப்புரிந்துகொண்டால் இன்னும் சமாதானத்தோடு வாழலாம். புரியாவிட்டால் நம்மை நம்பித்தான் தேவன் இருக்கிறார் என்று "இந்தியாவை எனக்குத் தாரும் தேவனே" என்று பிதற்றிகொண்டிருக்கவேண்டியதுதான்....
தேவனை கையாலாகாத தேவனாக, கோடாகோடி ஜனங்களை அவர் உண்டாக்கின ஜனங்களைக் காப்பாற்ற முடியாமல் நரகத்துக்கு அனுப்பும் தேவனைத்தான் இந்தக் கிறிஸ்தவம் அறிந்து வைத்துள்ளது.
ஆனால் நாங்களோ. எல்லாரையும் மீட்க்கும் பொருளாக தன்னையே தந்த கிறிஸ்துவின் மூலமாய் தேவனை ஒரு வெற்றியாளராக, ஒருவரும் கெட்டுப்போவது பிதாவின் சித்தமல்ல என்ற சித்தத்தை பரிபூரணமாக நிறைவேற்றும் சர்வ வல்லவராக, தேவனால் கூடாதது எதுவுமில்லை என்ற வசனத்துக்கு பாத்திரவானாக் காண்கிறோம்.
யாரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஏனென்றால் நீ ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை என்பது தேவதிட்டம்....
-- Edited by soulsolution on Saturday 14th of May 2011 09:52:02 AM